Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி ஸ்ரீ நவலடியான் கோயிலில் மனு கட்டும் போராட்டம்

ஆகஸ்டு 21, 2023 12:30

நாமமக்கல்: நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யவேண்டி விவசாயிகள், மோகனூர் ஸ்ரீ நவலடியான் திருக்கோயிலில் மனு எழுதிக்கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுக்காவில் உள்ள, வளையப்பட்டி, பரளி, என். புதுப்பட்டி, அரூர் சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்று அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இணைந்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மனு கொடுக்கும் போராட்டம், மெழுவர்த்தி ஏந்தி போராட்டம், மனித சங்கிலி, நாமம் போட்டு போராட்டம், தீர்த்தக்குட போராட்டம், அக்னி சட்டி போராட்டம், புத்தகம் வாசிக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுவரை இது குறித்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாமக்கல் மாவட்டம், மேகனூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ நவலடியான் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் உட்புறம் உள்ள மரத்தில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை மனுவாக எழுதிக்கட்டி வைத்து, இறைவனை வேண்டினால் கோரிக்கை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  மோகனூர் பகுதியில், சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி, மோகனூர் அருள்மிகு நவலடியான் கோயிலில்  கோரிக்கை மனு எழுதி கட்டும் போராட்டம் நடைபெற்றது.

மேலும் நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக செயலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், மோகனூர் ஒன்றிய செயலாளர் சிவகுமார், கிளை பொறுப்பாளர் சரவணன், தமிழக விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்துகொண்டு, சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோயிலில் மனுக்களை கட்டினர்.

பின்னர் கோயிலில் சாமி தரிசனம் செய்து சாமியை வேண்டினர். அதைத்தொடர்ந்து கோயிலுக்கு வெளியே, சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்